என்டிஆரின் மகள் புரந்தரேஸ்வரி.. ஆந்திர மாநில பாஜக தலைவரானார்!

Su.tha Arivalagan
Jul 05, 2023,10:03 AM IST
விசாகப்பட்டனம்: மறைந்த முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான டி. புரந்தரேஸ்வரி, ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு விதமான கூட்டணிக் கணக்குகளுடன்தான் புரந்தரேஸ்வரியை ஆந்திர மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்துள்ளதாக தெரிகிறது.



தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் பாஜக உள்ளது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த நிலையில் புரந்தரேஸ்வரியின் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

64 வயதாகும் புரந்தரேஸ்வரி, என்.டி.ராமாராவின் மகள் ஆவார். இவரது கொழுந்தனார்தான் சந்திரபாபு நாயுடு. ஆனால் சந்திரபாபு நாயுடுவுக்கும், புரந்தரேஸ்வரிக்கும் எப்போதும் ஒத்தே போகாது. தனது தந்தையிடமிருந்து தெலுங்கு தேசம் கட்சியைப் பறித்தவர், என்டிஆரின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர் சந்திரபாபு நாயுடு என்பது புரந்தரேஸ்வரியின் குற்றச்சாட்டாகும். 

ஆனால் தனது பழைய பகையை மறந்து விட்டு சந்திரபாபு நாயுடுவுடன் தற்போது கை கோர்க்கத் தயாராகி விட்டார். இதைத் தொடர்ந்துதான் அவரை பாஜக தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதிக்கத்தைத் தகர்க்க சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். அவருக்கு பாஜக ஆதரவாக உள்ளது. கூடவே  பவன் கல்யாண் கட்சியும் உள்ளதால் நிச்சயம் ஆந்திர மாநிலத்தில் வரும் லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற முடியும் என்பது பாஜகவின் கருத்தாகும்.

மேலும் என்டிஆர் அனுதாபிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில்தான் புரந்தரேஸ்வரிக்கு இந்தப் பதவியை பாஜக கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. புரந்தரேஸ்வ��ிக்காக என்டிஆர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு தங்களுக்கு ஆதரவாக வருவார்கள் என்பதும் பாஜகவின் கணக்காகும்.

ஆந்திர மாநில பாஜகவுக்கு இதுவரை எந்தப் பிரபலமான தலைவரும் தலைவராக இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக ஒரு பிரபலமான தலைவர் அக்கட்சியின் மாநிலத் தலைவராக வந்துள்ளார். புரந்தரேஸ்வரி மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2 முறை எம்பியாகவும் அவர் இருந்திருக்கிறார். முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பின்னர் பாஜகவுக்கு வந்து சேர்ந்தார். புரந்தரேஸ்வரியின் கணவர் டகுபதி வெங்கடேஸ்வர ராவ் ஐந்து முறை எம்எல்ஏ ஆவார்.