ஸ்டிரைக்கில் குதிக்கும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள்.. மின் உற்பத்தி பாதிக்கும்

Su.tha Arivalagan
Jun 02, 2023,12:09 PM IST
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலைய ஜீவா ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான நோட்டீஸை முறைப்படி நிர்வாகத்திடம் அவர்கள் பேரணியாக சென்று ஒப்படைத்துள்ளனர்.

என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள்  என்எல்சி யில் பணிபுரியும், சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், பாரத பிரதமரின் ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழும் பணிநிரந்தரம் செய்தல், அது வரை மாத ஊதியமாக மாதம் ரு.50 ஆயிரம் வழங்க வேண்டும், நிலம், வீடு கொடுத்து சொசைட்டியில் பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்தல், செய்யும் வேலைக்கு தகுந்தாற் போல் பதவி அளித்து, அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், 07-08-2020 அன்று போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறை வேற்ற வேண்டும், அதன் படி விதிகளை மீறிய என்எல்சி நிர்வாகத்தின் மீது மத்திய தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி,  கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், மே 10 ஆம் தேதி நீதி கேட்கும் பேரணியும் நடத்தினர்.



அப்போது உரிய அதிகாரம் மிக்கவர்கள் உரிய கோரிக்கை மனுவை பெற வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை மனுவை அளிக்காமல், பதிவு தபால் முலம் அனுப்பினர். 30 ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர். 
அதன்படி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், நேற்று  பெரியார் சிலை அருகே ஜீவா சங்கத் தலைவர் அந்தோணிசெல்வராஜ் தலைமையில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் பேரணி துவங்கியது. 

இதில் சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலாளர் செல்வமணி, தமிழக உழைக்கும் மக்கள்  முன்னணி மாநில தலைவர் விருதை காந்தி, மாநில பொதுச்செயலாளரும், ஜீவா சங்க சிறப்பு செயலாளருமான சேகர், தமிழ்நாடு மின்வாரிய கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன், தமிழ்நாடு அரசு ஊழியர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரணியாக சென்றவர்களை நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சத்சங்கம் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்எல்சி நிர்வாக வாகனத்தில் போராட்டக்குழுவின் சார்பில் 5 நபர்களை அழைத்துச் சென்றனர். அங்கு என்எல்சி மனிதவளத்துறை  துணை பொது மேலாளர் திருக்குமாரிடம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸை வழங்கினர்.

அதன் பின்னர் பெரியார் சதுக்கத்திற்கு திரும்பிய போராட்டக்குழுவினர், வரும் 14-ஆம் தேதிக்குள் நிர்வாகம் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்காவிட்டால், 15-ஆம் தேதி மாலை காமராஜர் சதுக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்தனர்.