ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு வைக்கப் போகிறது பாஜக.. தேசியவாத காங்கிரஸ் கருத்து

Su.tha Arivalagan
Jul 03, 2023,10:22 AM IST
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜீத் பவாரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துள்ளதன் மூலம், சிவசேனாவிலிருந்து கட்சி தாவி தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவின் அதிகாரம் அடியோடு குறையப் போகிறது. அவர் டம்மியாக்கப்படுவார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

எப்படி சிவசேனாவை உடைத்து பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்ததோ தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அது உடைத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் தேர்தல் சின்னம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அது ஷிண்டேவிடம் இழந்து விட்டது.



ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி விட்டு, முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸை துணை முதல்வராக்கியது பாஜக. இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார், பிரபுல் படேல் மற்றும் 29 எம்எல்ஏக்களை பிரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துள்ளது பாஜக. அஜீத் பவார் துணை முதல்வராகியுள்ளார்.

ஆனால் இத்தனை களேபரம் நடந்தும் கூட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெரிதாக அதிர்ச்சி அடைந்தவர் போலவே இல்லை. ரொம்ப கேஷுவலாகத்தான் இருக்கிறார். இதெல்லாம் தேசியவாத காங்கிரஸுக்குப் புதிதல்ல என்று ரொம்ப சாதாரணமாக பேசுகிறார். பெரிதாக அவர் அலட்டிக் கொண்டது போலவே தெரிகிறது.

இந்த நிலையில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் இதுகுறித்துக் கூறுகையில், இந்த செய்தி ஏக்நாத் ஷிண்டேவுக்கு நல்லதில்லை. அவருக்கும் பட்னாவிஸுக்கும் இடையே ஏற்கனவே நிறைய உரசல்கள் உள்ளன. இனி ஷிண்டேவின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.  அவர் விரைவில் டம்மியாக்கப்படுவார். 

ஏக்நாத் ஷிண்டேவின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே அங்குள்ள பலருக்கு அதிருப்தி உள்ளது.  அஜீத் பவாரை உள்ளே கொண்டு வந்ததே ஷிண்டேவை ஓரம் கட்டத்தான். விரைவில் அது வெடிக்கும். பிரச்சினை உருவாகும் என்றார் அவர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே கூறுகையில், முன்பு டபுள் என்ஜின் அரசாக இது இருந்தது. தற்போது ஒரு முதல்வர், 2 துணை முதல்வர்கள் என டிரிபிள் என்ஜின் அரசாக மாறியுள்ளது. இது மாநிலத்திற்கு நல்லது என்றார் அவர்.