தாயே பேசும் தெய்வம் நீயே... தாய்மையை போற்றும் அன்னையர் தினம்!

Aadmika
May 14, 2023,10:27 AM IST
சென்னை : தெய்வம் அனைத்து இடங்களிலும் தன்னால் இருக்க முடியாது என்பதற்காக தான் அம்மாவை படைத்தது படைத்தது என்பார்கள். ஆனால் தெய்வம் கூட தன்னை தேடி வந்து, வேண்டி, வரம் கேட்டும் பக்தனுக்கு , அவனது தகுதிக்கு ஏற்ப வரன் தரும். வாய் திறந்து கேட்டாமலேயே பிள்ளையின் முகத்தை பார்த்தே தனது பிள்ளைக்கு என்ன வேண்டும் என புரிந்து கொண்டு, அன்பை பொழியும் தாய், தெய்வத்திற்கும் ஒரு படி மேல் தான்.

அத்தகைய அன்னையை, தாய்மையை போற்றும் விதமாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுகிழமையில் உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் முதல் முதலில் அமெரிக்காவின் விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த நாளை விடுமுறை நாளாகவும் தனது நிறுவனத்தில் அறிவித்தார். பிறகு 1914 ம் ஆண்டு இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாக அறிவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன்.




அமெரிக்காவை தொடர்ந்து மெல்ல மெல்ல உலகின் பிறகு நாடுகளிலும் இது பரவி, இன்று அன்னையர் தினம் உலகமே கொண்டாடும் தினமாக மாறி உள்ளது. உலகின் பல நாடுகளிலும் பல தேதிகளில் அன்னையர் தினம் கொண்டாடும் பழக்கமும் உள்ளது. 2023 ம் ஆண்டில் அன்னையர் தினமானது மே 14 ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு உயிரின் வேராகவும் இருப்பது அன்னைதான்.. ஒவ்வொரு உயர்வையும் மனதார வாழ்த்துவதும் அன்னைதான்.. பிள்ளை மீது பொறாமை கொள்ளாமல் போற்றி பாதுகாத்து ஊக்கம் தருபவரும் அன்னைதான்.. கணிவும், கண்டிப்பும், பரிவும், பாசமும் கலந்து நடமாடும் தெய்வமாக திகழ்பவள் அன்னைதான்.

தன் உயிரை பணயம் வைத்து நம்மை ஒரு உயிராக இந்த உலகிற்கு தந்தவள் தாய். அந்த தாயின் அன்பும், தியாகமும், பரிவும் என்றென்றும் போற்றுதலுக்குரியது. வாழ்க்கை முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவள் தாய் என்றாலும், வருடத்தின் இந்த நாளில் மட்டுமாவது அவரை போற்றிடுவோம்.