30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பும் "மிஸ் வேர்ல்ட்"!

Su.tha Arivalagan
Jun 09, 2023,02:43 PM IST
டெல்லி: மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது 71வது மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியாகும்.

இந்தியாவில் கடந்த 1996ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம். இது 46வது மிஸ் வேர்ல்ட்  போட்டியாகும். நவம்பர் 23ம் தேதி இப்போட்டி பெங்களூரு நகரில் நடைபெற்றது.  தொடக்க சுற்றுப் போட்டிகள் மட்டும் செஷல்ஸ் தீவுகளில் நடைபெற்றது.  உலகம் முழுவதுமிருந்து 88 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஐரீன் ஸ்கில்வா மிஸ் வேர்ல்ட் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இந்தியாவின் ராணி ஜெயராஜுக்கு டாப் 5 அழகிகள் பட்டியலில்  இடம் கிடைத்தது.



இந்த நிலையில் இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. நவம்பர் மாதம் இந்தப் போட்டி நடைபெறும். இறுதித் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், இந்தியாவில் 71வது மிஸ்வேர்ல்ட் அழகி இறுதிப் போட்டி நடைபெறும். இப்போட்டித் தொடரில் மொத்தமாக 130 அழகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.  இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பான முறையில் 71வது மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி நடைபெறும் என்றார் அவர்.

ஒரு மாத காலம் இந்த மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறும். 130 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்படும். நடப்பு மிஸ் வேர்ல்ட் ஆக இருப்பவர் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பியலவஸ்கா ஆவார். 

இந்தியா சார்பில் இப்போட்டியில் சினி ஷெட்டி கலந்து கொள்வார். இவர் நடப்பு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஆவார்.

இந்தியா இதுவரை 6 முறை மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றுள்ளது. முதன் முதலில் 1966ம் ஆண்டு ரீட்டா பரியா இப்பட்டத்தை வென்றார். ஆனால் 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் இப்பட்டம் வென்ற பிறகுதான் இது இந்தியாவில் பிரபலமானது. அவரைத் தொடர்ந்து 1997ல் டயானா ஹெய்டன், 1999ம் ஆண்டு யூக்தா மூகி, 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ரா, கடைசியாக 2017ம் ஆண்டு மனுஷி சில்லார் ஆகியோர் இப்பட்டம் வென்றுள்ளனர்.