அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் ஆபரேஷன்.. சீராக இருப்பதாக தகவல்

Su.tha Arivalagan
Jun 21, 2023,11:17 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி கதறித் துடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது இருதயத்தில் முக்கியமான 3 இடத்தில்  அடைப்பு இருப்பதாக தெரிய வந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.




அவருக்கு விரைவில் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவமனை இயக்குநர் பரிந்துரைத்திருந்தார்.இதைத் தொடர்ந்து அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி  சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது.  அதன் பின்னர் அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


அங்கு அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அறுவைச் சிகிச்சை நடந்தது. காலை 5 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அமைச்சர்  செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாள பைபாஸ் அறுவைச் சிகிச்சை டாக்டர் ஏ.ஆர். ரகுராம் தலைமையில் நடைபெற்றது.  நான்கு இடங்களில் அடைப்புகள் நீக்கப்பட்டன. தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளது. அவர் டாக்டர்கள் குழுவால் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை


இதற்கிடையே, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்து மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.