டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக் கூடாதுன்னு சொல்லலை.. செந்தில் பாலாஜி மறுப்பு

Su.tha Arivalagan
May 20, 2023,11:24 AM IST
சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வாங்கக் கூடாது என்று வெளியான தகவல் தவறானது என்று தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ. 2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாகவும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது கையிருப்பில் உள்ள ரூ. 2000 நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி விடலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.



இதனால் 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்த ரூ. 2000 நோட்டு கரன்சியானது முடிவுக்கு வருகிறது. செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகும் இந்த நோட்டு செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தாலும் மக்களால் அதை செயல்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கக் கூடாது என்று நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக ஒரு செய்தி வெளியானது. இதனால் குடிகாரர்களிடையே பெரும் குழப்பமும், அச்சமும் ஏற்பட்டது. கடைகளுக்கு போய் சரக்கு வாங்குவதாக இருந்தால் ரூ. 2000 நோட்டை பயன்படுத்த முடியாதா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் இப்படி வெளியான செய்தி தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 நோட்டை வாங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்தி தவறானது. அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.