ஆங்கோர் ஏழைக்கு கல்வி அளித்தல்.. மாணவியின் மொத்த படிப்புச் செலவையும் ஏற்ற பிடிஆர்

Su.tha Arivalagan
May 28, 2023,04:02 PM IST
மதுரை: மதுரையில் உள்ள இலங்கைத்  தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் ஏழை  மாணவியின் மொத்த படிப்புச் செலவையும், அமைச்சர் பிடி.ஆர். பழனிவேல்தியாகராஜன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அமைச்சராக மட்டும் அல்லாமல் பல்வேறு சமூக நலப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அந்த வகையில் தற்போது அவர் சூப்பரான ஒரு வேலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலகம் போட்டுள்ள டிவீட் விவரம்:

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த ஆணையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவைப் குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு  தனியார் தொலைக்காட்சி சேனலில் தகவல் வெளியாகி இருந்தது.



இதனை அறிந்த மாண்புமிகு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அம்மாணவியையும், அவரது பெற்றோரையும் தமது இல்லதிற்கு அழைத்து வாழ்த்தியதோடு படிக்கப் போதிய வசதி இல்லாததால் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடிவு செய்த அம்மாணவிக்குக் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி மதுரை லேடி டோக்  கல்லூரி முதல்வரிடம் பேசி அப்பெண்ணின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் அம்மாணவி விரும்பும் துறையில் இடம் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தற்பொழுது லேடி டோக் கல்லூரி முதல்வர் அம்மாணவிக்குச் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் ஒதுக்கியுள்ளதைத் தொடர்ந்து தனக்கு இடம் பெற்றுத் தந்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்திய அமைச்சருக்கு மாணவி தனது குடும்பத்தினரோடு அமைச்சரின் இல்லம் வந்து நன்றி தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று சொன்ன பாரதியாரின் வரிகளை பிடிஆர் பழனிவேல் ராஜன் நிஜமாக்கியுள்ளார். பாராட்டலாம்!