சம்பள உயர்வு ரத்து.. போனஸ் கிடையாது..  மாற்றி யோசிக்கும் மைக்ரோசாப்ட்!

Su.tha Arivalagan
May 11, 2023,03:46 PM IST
கலிபோர்னியா:  முழு நேர ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வும்,  போனஸும் கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்னொரு சுற்று வேலைநீக்க அபாயத்திலிருந்து தற்காலிகமாக  ஊழியர்கள் தப்பியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் 10,000 பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அறிவித்தது மைக்ரோசாப்ட். உலகம் முழுவதும் முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட துக்கடா நிறுவனங்கள் வரை பல ஆயிரம் பேர் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வேலையிழந்துள்ளனர். இந்த வேலை நீக்கம் என்பது தற்போது தொடர் கதை போல ஆகியுள்ளது. நினைத்தால் வேலையை விட்டு நீக்கி விடும் நிலைக்கு கொண்டு போய் விட்டனர்.



இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து ஒரு அதிரடியைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முழு நேர ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு கிடையாது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் போனஸையும் நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா மெயில் அனுப்பியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது தனது முழு கவனத்தையும் செயற்கை நுன்னணறிவு தொழில்நுட்பத்தின் பக்கம் திருப்பியுள்ளது. இதற்காக அது சாட்ஜிபிடி- உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பல நூறு கோடியையும் அது ஒதுக்கியுள்ளது. மேலும் தனது தயாரிப்புகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை அது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அதேபோல பிங் தேடுதளத்திலும் இதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.