ராஜினாமா கடிதத்தை எழுதி.. கிழித்துப் போட்ட மணிப்பூர் முதல்வர்!

Su.tha Arivalagan
Jul 01, 2023,10:07 AM IST

இம்பால்: பெரும் கலவரம் மற்றும் வன்முறையில் சிக்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் பாஜக முதல்வர் பைரன் சிங் ராஜினாமா கடிதத்தை எழுதி பின்னர் கிழித்துப் போட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாநிலம் கலவரத்தால் சின்னாபின்னமாகி உள்ளது. இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது மணிப்பூர் பாஜக அரசு. முதல்வர் பைரன் சிங்கின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.



பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன. இந்த நிலையில் பைரன் சிங் ராஜினாமா செய்து கடிதம் தயாரித்து விட்டதாகவும் பின்னர் அதை கிழித்துப் போட்டு விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் உலா வருகிறது. இதை ஒரு மூத்த அமைச்சரே தெரிவித்துள்ளார். மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து தனது கடிதத்தை கிழித்துப் போட்டு விட்டதாகவும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று இம்பாலில் உள்ள பைரன் சிங் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மனிதச் சங்கிலியை ஏற்படுத்தினர். முதல்வர் பதவி விலகக் கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்துதான் தனது ராஜினாமா முடிவை முதல்வர் பைரன் சிங் ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.