மகா சிவராத்திரி.. கேட்ட வரங்களை தரும் மகா சிவ விரதம்!

Aadmika
Feb 17, 2023,09:35 PM IST

சென்னை : அம்மனுக்கு 9 நாள் நவராத்திரி, சிவனுக்கு ஒரு நாள் சிவராத்திரி என்பார்கள். அப்படி சிவ பெருமானுக்கு உரிய எட்டு முக்கியமான விரதங்களில் முதன்மையானதும், பெரும் புண்ணியங்களை தரக்கூடியதுமான விரதம் மகா சிவராத்திரி விரதம். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை கிருஷ்ணபட்ச சதுர்தசியில் வரும் சிவராத்திரியை மட்டுமே மகா சிவராத்திரி என போற்றுகின்றோம்.


மகா சிவராத்திரி தோன்றிய கதை :


சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டு இரு சக்திகள் ஒன்றிணைந்த நாளே மகா சிவராத்திரி என வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் பெரிய விழாவாக நடத்தப்படும் மகா சிவராத்திரி திருநாள் உருவானதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. பிரளய காலத்தின் போது சிவ பெருமானுக்குள் அத்தனை உயிர்களும் ஐக்கியமாகின. இதனால் கவலை அடைந்த பராசக்தி, உலக உயிர்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என இரவு முழுவதும் சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்ட நாளே மகா சிவராத்திரி திருநாள் என்று புராணங்கள் சொல்கின்றன.


சிவனின் அடி முடியை காண புறப்பட்ட பிரம்மாவிற்கும், மகாவிஷ்ணுவிற்கும் ஜோதி வடிவமாகவும், பிறகு லிங்கோத்பவராக  சிவ பெருமான் காட்சி கொடுத்தது மகா சிவராத்திரி திருநாளில் தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் மகா சிவராத்திரியும், லிங்க வழிபாடும் தோன்றிய தலம் திருவண்ணாமலை என சொல்லப்படுகிறது. பார்வதி தேவிக்காக சிவன் இரவு முழுவதும் ஆனந்த நடனமிட்ட காலமே மகா சிவராத்திரி என்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.


மகா சிவராத்திரி நான்கு கால பூஜை :


மகா சிவராத்திரி நாளில் இரவு 7.30 மணி துவங்கி, மறுநாள் அதிகாலை 6 மணி வரை சிவனுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். முதல் காலம் என்பது பிரம்மா சிவனை பூஜித்த காலம் என்றும், 2 வது காலம் மகாவிஷ்ணு சிவனை பூஜித்த காலம் என்றும், 3வது காலம் பராசக்தி சிவனை வழிபட்ட காலம் என்றும், 4 ம் காலம் மனிதர்களும், ரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை வழிபட்ட காலம் என்றும் சொல்லப்படுகிறது. இதில் பராசக்தி, சிவனை வழிபட்ட 3 ம் கால பூஜையே மிக முக்கியமான காலம் ஆகும்.


சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்: அரசு உத்தரவு


நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், 3 ம் கால பூஜையின் போது கண்டிப்பாக கண் விழித்து, சிவனை வழிபட வேண்டும். எந்த காலத்திலும், எந்த கோவிலிலும் பூஜைக்கு ஏற்றது அல்ல என சிவ பெருமானிடம் சாபம் பெற்ற தாழம்பூவை மன்னித்து, ஈசன் தனது முடியில் சூடிக் கொண்ட காலம் இது. மகா சிவராத்திரியன்று மூன்றாவது கால பூஜையின் போது மட்டுமே சிவ பெருமானுக்கு தாழம்பூ சாத்தி பூஜை செய்யப்படும். அன்னை பராசக்தி வழிபட்ட காலம் என்பதால் இந்த நேரத்தில் நாம் உண்மையான பக்தியுடன் என்ன வேண்டிக் கொண்டாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.


மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:


2023 ம் ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி 18 ம் தேதி வருகிறது. அதுவும் பல ஆண்டுகளுக்கு பிறகு சிவனை வழிபட மிகவும் உகந்த காலமான சனி பிரதோஷ நாளில் மகா சிவராத்திரியும் இணைந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகி�����து. மகா ��ிவராத்திரி விரதம் இருக்க நினைப்பவர்கள் பிப்ரவரி 18 ம் தேதி அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு பூசி விரதத்தை துவங்கி விட வேண்டும். அன்று இரண்டு வில்வ இலைகளையாவது சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும்.


பிப்ரவரி 18 ம் தேதி நாள் முழுவதும் உபவாசம் இருந்து, மாலையில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு இரவு முழுவதும் கண் விழித்து, சிவனுக்குரிய நாமங்கள், மந்திரங்கள், பஞ்சாட்சர மந்திரம் ஓதி வழிபட வேண்டும். பிப்ரவரி 19 ம் தேதி காலை நான்காம் கால பூஜை முடிந்த பிறகு, சூரிய உதயத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டு உபவாசத்தை நிறைவு செய்யலாம். பிப்ரவரி 18 ம் தேதியும், பிப்ரவரி 19 ம் தேதியும் பகல் முழுவதும் தூங்கக் கூடாது. பிப்ரவரி 19 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விளக்கேற்றி, வழிபாடு செய்த பிறகு தான் தூங்க வேண்டும்.


பலன்கள் :


இவ்வாறு மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட்டால் முந்தைய பிறவியும், முந்தைய காலத்திலும் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி, மீண்டும் பிறவா நிலை என்ற முக்தி கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.