மகா சிவராத்திரி விழா : தமிழகத்தில் முக்கிய கோவில்கள் இன்று இரவு திறந்திருக்கும்!

Aadmika
Feb 18, 2023,11:00 AM IST
சென்னை : மகா சிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 18) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். 



வழக்கமாக அனைத்து கோவில்களும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பகல் பொழுதில் நடை அடைக்கப்படும். பிறகு மாலையில் திறக்கப்பட்டு, இரவு நடை சாத்தப்படுவது வழக்கம். சில கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இரவு தான் நடை சாத்தப்படும். ஆகம விதிப்படி, கோவில்கள் இரவில் நடை சாத்தப்பட வேண்டும். 


சிவசேனா சின்னம் பறிப்பு ... ஜனநாயகத்திற்கு ஆபத்து..  உத்தவ் தாக்ரே ஆவேசம்


ஆனால் மகா சிவராத்திரி நாளில் இரவு நேரத்தில் தான் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. இதனால் இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெற உள்ளது.

எந்த நேரத்தில் எந்த கால பூஜை நடைபெறும் என்ற விபரங்களையும் கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டு வருகின்றனர். திருவண்ணாமலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட முக்கிய சிவ தலங்களில் மலையேறி சென்றும், கிரிவலம் வந்து சிவ வழிபாடு செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்பட உள்ளதால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை மற்றும் அர்த்த சாம பூஜைகள், நான்காம் கால மகா சிவராத்திரி பூஜை  நிறைவடைந்த பிறகு, பிப்ரவரி 19 ம் தேதியான நாளை காலை நேரத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் இரவு முழுவதும் திறக்கப்பட்டு, நாளை காலை மாசி தேரோட்டம் நிறைவடைந்த பிறகு பகல் 1 மணிக்கே நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.