மூன்றாம் தேய்பிறையாய் தேய்ந்து தேய்ந்து பாதிக் கடித்து வைக்கப்பட்ட சீனி மிட்டாயாய்!

Su.tha Arivalagan
May 31, 2023,11:20 AM IST
-பிரேமா சுந்தரம்

தேடிப் பார்த்தேன்..
தேடித் தேடிப் பார்த்தேன்..
விழிகளுக்குள் அகப்படவில்லை அணங்கின் அகம் கொண்டுள்ள நானூறு நினைவுகளில் ஏதேனும் நான்கைப் பற்றிய ஆணின் எழுத்தை..

தேடிப் பார்த்தேன்..
சல்லடை கொண்டு சலித்துப் பார்த்தேன்..
ஆணின் எழுத்தெல்லாம் அணங்கின் அழகை ஆதூரித்தே இருந்தது.. முகம் நிலவைப் போல்.. விழிஇமைகள் வில்லைப் போல்.. விழிகள் மீன்களைப் போல்.. இப்படி பல போல் எனும்  உருபுகளால் உவமேயங்கொண்டு பெண் உவமையாக்கப் பட்டு அதன் மூலம் ஊமையாக்கப் பட்டுக் கொண்டேயிருக்கிறாள்..



தேடிப் பார்த்தேன்..
அகராதி கொண்டு வலிந்து பார்த்தேன்.. பெண்ணெழுத்துக்கு என்ன தலையெழுத்து எனத் தெரியவில்லை.. என்ன தோன்றினாலும் அந்த எண்ணத்தை முழுதாய் எழுத்தாய் வடித்து விட்ட பின் அந்த எழுத்தின் படிமம் தன் மீதே சுமத்தப்பட்டு விடுமோ என எண்ணி மருகி பௌர்ணமி நிலவின் மூன்றாம் தேய்பிறையாய் தேய்ந்து தேய்ந்து பாதிக் கடித்து வைக்கப்பட்ட சீனி மிட்டாயாய் கடைத்தெருவின் கண்ணாடிப் பேழைக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது பெண்ணெழுத்து..

தேடிப் பார்த்தேன்..
முடுக்கெல்லாம் தேடலை முடுக்கிப் பார்த்தேன்..
பெண்ணின் வனப்புக்கும் பெண்ணின் சிரிப்புக்கும் வார்க்கப்பட்ட வார்த்தைகளில் பாதியில் பாதி கூட பெண்ணின் உணர்வுகளுக்காய் வார்க்கப்படவில்லை.. முட்டுகின்ற மூச்சினை ஒற்றை சாவித் துவார காற்றின் வழி சரி செய்து கொள்ளத்தான் பெண்ணெழுத்துக்கு சாசனம் விதிக்கப்பட்டது போலும்..

போதும் என தேடலை நிறுத்தி விட்டேன்..‌ கணமாய் அடர்த்தியாய் அழுத்தமாய் அழுகையாய் இருக்கிறதே இப்பெண்ணெழுத்து என எண்ணும் தேக்கநிலை கொண்ட மனக்குளத்தின் கூக்குரலுக்கு செவி சாய்த்து எழுத்தென்னும் விரிகோணத்தை குறுங்கோணமாய் சினிமா, பாட்டு என வருணைனைக்குள் முடங்காமல் எண்ணுவதையெல்லாம் எழுத்தாக்கி ஊற்றுநிலை கொண்ட மனக்கிணறின் எழுத்துநீரை பூவாளி கொண்டு வெளியே இரைக்கிறேன்.. தூர்வாரப்பட்ட மனக்கிணறினுள் புதிதாய் ஊற்றெடுத்த வார்த்தைகள் அனைத்தும் இப்பெண்ணெழுத்தைப் பிடித்த அனைவரிடமும் அணுக்கமாய் வந்து சேரும்..!