குடும்ப தலைவிகளுக்கும் சொத்தில் பங்குண்டு... சென்னை ஐகோர்ட் அதிரடி

Aadmika
Jun 26, 2023,09:25 AM IST
சென்னை : கணவர் சம்பாதித்த பணத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு என சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது, 

தான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்தில் மனைவிக்கு எந்த உரிமையும் கிடையாது என கணவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி, அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை. 


வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கும்
பெண்ணிற்கு தான் அதிக பொறுப்புகள் உண்டு. குடும்பத்தை நிர்வகிப்பது, திட்டமிடுவது, நிதியை செலவிடுவது, குடும்பத்தை வழிநடத்துவது என பல பொறுப்புக்கள் உள்ளது. ஒரு சமையல்காரராக விதவிதமாக சமைத்துக் கொண்டுக்க வேண்டும். சமையலறையை நிர்வகிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் டாக்டரை போல் கால மாற்றத்திற்கு ஏற்ப குடும்ப உறுப்பினர்களுக்கு வீட்டிலேயே மருந்து தயார் செய்து தருவது. பொருளாதார வல்லுநராக சேமிப்பது, செலவிடுவது ஆகியவற்றைய செய்கிறார். தனது திறமையால் வீட்டில் சுமூகமான சூழலை கொண்டு வருகிறார். அவரின் பங்களிப்பை அளவிடவே முடியாது.

மனைவியாக, குடும்ப தலைவியாக இருப்பது விடுமுறை இல்லாமல் 24 மணி நேர வேலை. வேலைக்கு செல்லும் கணவருக்கு 8 மணி நேரம் மட்டும் தான் வேலை. குடும்ப தலைவிகள் ஓயாமல் உழைப்பதில் பயன் அடைபவர்கள் கணவர்கள் தான். காலம் முழுவதும் கணக்கு பார்க்காமல் குடும்பத்திற்காக உழைக்கும் மனைவிக்கு சொத்தில் பங்கு தர முடியாது என்பதை இந்த கோர்ட்டால் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மறைந்த கருணாநிதி, பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற  வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்டத்தை பல பத்தாண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தார். அதன் பிறகுதான் பெண்களின் வாழ்க்கை வெகுவாக முன்னேற்றம் கண்டது. அவர்களும் தங்களது பிறந்த வீட்டு சொத்துக்களில் சம பங்கைப் பெற்று சமத்துவம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது வாழ வந்த வீட்டிலும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு உண்டு என்ற மிகச் சிறப்பான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.