சென்னை பறக்கும் ரயில் சேவை திட்டத்தில் மீண்டும் மாற்றம்

Aadmika
Jun 08, 2023,11:35 AM IST
சென்னை : சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரையிலான பறக்கும் ரயில் திட்டத்திற்காக செய்யப்பட இருந்த மாற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4.3 கி.மீ தூரத்திற்கு நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த திட்டத்தை விரைந்து முடிக்க ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



இந்த திட்டத்திற்காக வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் ஜூலை 1 ம் தேதி துவங்கி, அடுத்த 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜூலை 1 முதல் எழு மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்க போடப்பட்டிருந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார ரயில்கள் எப்போது போல் வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்பட உள்ளது. அதே சமயம் இந்த திட்டத்திற்கான பணிகளை மாற்று வழியில் நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.