ரூ. 2000 வாபஸ்: மு.க.ஸ்டாலின் போட்ட "கவிதை" டிவீட்...நச் பதிலடி கொடுத்த "மலை"

Aadmika
May 20, 2023,03:35 PM IST

சென்னை : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கவிதை வடிவில் ட்வீட் போட்டுள்ளார். அதே ஸ்டைலில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நச்சுன்னு பதிலடி கொடுத்துள்ளார்.

2016 ம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாகவும், அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்திருந்தது. அதே சமயம் சட்ட ரீதியான டெண்டர்களுக்கு ரூ.2000 நோட்டுக்களை தொடர்ந்து பயன்படுத்த தடையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. 



இந்நிலையில் ரூ.2000 நோட்டு திரும்ப பெறும் மத்திய அரசின் முடிவை அரசியல் கட்சிகள் பலவும் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

" 500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள் !
கர்நாடகப் படுதோல்வியை
மறைக்க
ஒற்றை தந்திரம் !" என பதிவிட்டுள்ளார். 

ஆனால் முதல்வரை கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் பலர், உங்கள் வீட்டில் இருக்கும் பணத்திற்கு பாதிப்பு இல்லையே. தலைவரு ஏன் இப்படி பதறுறாரு என கேட்டு கமெண்ட் செய்துள்ளனர்.

அண்ணாமலை பதிலடி

இதற்கிடையில் ஸ்டாலினின் ட்வீட்டிற்கு ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் தனது ட்விட்டர் பதிவில்,

"கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள்,
உயிர் இழப்பிற்கு காரணமானவர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு,
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள்,
டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி,
இவை எல்லாம் மறைக்க
நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி.
பாசமா? எல்லாம் வேஷம் !" என ட்வீட் போட்டுள்ளார்.

இருவரது டிவீட்டுகளுக்கும் இப்போது திமுக, பாஜகவினர் சரமாரியாக ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.