நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. தாமரை.. என்னவா இருக்கும்.. எகிற வைக்கும் வெயிட்டிங்!

Su.tha Arivalagan
May 26, 2023,04:05 PM IST
சென்னை: தாமரை பாட்டு எழுதினால்.. பசி தூக்கம் இல்லாமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.. சின்னதாக ஒரு பெரிய இடை வெளி விட்டு விட்டு மீண்டும் பாட்டுக்குத் திரும்பியிருக்கிறார் இந்த கவிதைத் தாமரை.

தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த அருமையான பாடலாசிரியர்தான் தாமரை. ஆணாதிக்கம் மிகுந்த இந்த திரையுலகில் தாமரை போன்ற பெண்ணரசிகள் ஆதிக்கமும், ஆளுமையும் செலுத்துவதும், செலுத்த வாய்ப்பு கிடைப்பதும் அரிதிலும் அரிதான விஷயம்.




தமிழில் கண்டதையும் கலக்க மாட்டேன், ஆபாசம் சேர்க்க மாட்டேன் என்று இலக்கணமும், எல்லையும் வகுத்துக் கொண்டு பாட்டு எழுதுபவர் தாமரை. இதனால்தான் இவருக்கு மற்றவர்களை விட வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் தாமரை கவலைப்படுவதில்லை. அவரது கொள்கைக்கு இணங்கும் பாடல்களை மட்டுமே புணைவது இவரது இயல்பு.

அவரது ஒவ்வொரு பாடலும் முத்திரை பதித்தவைதான்... தமிழ்த்தேனை திகட்ட திகட்ட ரசிகர்களுக்குக் கொடுத்தவைதான்.. கடைசியாக 99  சாங்க்ஸ் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட்டு எழுதியிருந்தார் தாமரை. அதன் பின்னர் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாட்டெழுத அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார் தாமரை.

25.5.23. ஓர் இடைவெளிக்குப் பிறகு (After a while) .. என்ன படம் ? என்ன பாடல் ??? 
காத்திருப்போம் ( What movie ? What song ???Let's wait ) என்று தமிழும், ஆங்கிலமும் கலந்து அந்த போஸ்ட்டை எழுதியுள்ளார் தாமரை.. என்ன பாடலாக இருக்கும் என்று இப்போதே நமக்கு வெறி ஏறுகிறது. காரணம், தாமரையின் தமிழ் வரிகளுக்கு உயிர்ப்பு கொடுக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இந்தப் பாடலுக்கும் இசை என்பதால்.

எதுவாக இருந்தால்.. நிச்சயம் "தாமரை இலை"யில் விழப் போவது அற்புதமான தமிழ் விருந்தாக மட்டுமே இருக்கும்.. ஸோ.. சந்தோஷமாக விருந்துண்ண காத்திருப்போம்.