தர்மம் தலைகாக்கும் : தான தர்மம் செய்தும் கர்ணனின் உயிர் பிரிந்தது ஏன்?

Aadmika
Jan 04, 2023,08:40 AM IST

தான தர்மம் செய்ய வேண்டும் என நமது முன்னோர்கள், பெரியவர்கள் சொல்வதுண்டு. நமது சாஸ்திரங்களும் இதையே வழியுறுத்துகின்றன. தர்மம் தலை காக்கும் என்பார்கள். அப்படியானால், தனது வாழ்நாள் முழுவதும் கொடுப்பதையே கடமையாக வைத்திருந்த கர்ணன் ஏன் காப்பாற்றப்படவில்லை? போர்க்களத்தில் அர்ஜூனன் விட்ட அம்பினால் கர்ணன் உயிர் பிரிந்தது எப்படி?


தான தர்மங்கள் செய்வது என்றாலே உதாரணமாக எல்லோருடைய மனதிலும் தற்போது வரை வருவது கர்ணன் தான். அப்படி தனது வாழ்நாள் முழுவதும் கேட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுத்த கொடை வள்ளலாக, உலகிற்கு உதாரணமாக உள்ளவன் கர்ணன். அவன் போர்க்களத்தில் உயிரிழந்த போது தேவர்கள் அனைவருக்கும், கர்ணன் செய்த புண்ணியங்கள் ஏன் அவனை காப்பாற்றவில்லை? அவனது உயிர் எப்படி பிரிந்தது என்ற சந்தேகம் வந்தது?




அனைத்தும் அறிந்த மாய கண்ணன், தேர்வர்களின் கேள்விகளை புரிந்து கொண்டு, சிரித்த படி பதிலளித்தான். " தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. ஒருவர் நம்மிடம் வந்து என்னிடம் இல்லை. என்னுடைய நிலை இது. எனக்கு இதை செய் என கேட்ட பிறகு அவர்களுக்கு தேவையானதை செய்வது தானம். ஆனால் ஒருவர் கேட்காமலேயே அவருடைய நிலை அறிந்து, அந்த நிலை மாறுவதற்காக அவர்களுக்கு வேண்டியதை, எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்வது தர்மம்.

கர்ணன், தனது வாழ்நாள் முழுவதும் தானம் செய்தான். அது ஒரு அரசனுக்கு உரிய கடமையும் கூட. அதனால் அதை செய்தான். அதற்கான புண்ணியமும் அவனுக்கு கிடைத்தது. ஆனால் தர்மம் செய்யவில்லை. அவன் செய்த தானம், அதற்கு கிடைத்த புண்ணியம் அவனது உயிரை பிரிய விடாமல் தாங்கி பிடித்து நின்றது.  நான் அந்தணராக சென்று அந்த தர்மத்தின் பலன்களாக கிடைத்த புண்ணியத்தையே தானமாக கேட்டு பெற்றேன். அந்த புண்ணிய தானத்தை கூட நான் கேட்டுத் தான் பெற்றேன். அவனாக தரவில்லை.


புண்ணியங்களை நான் பெற்றுக் கொண்டதால், சாதாரண மனிதனாக பிறவி எடுத்துள்ளான் என்ற காரணத்தால், பிறக்கும் உயிர்கள் அனைத்திற்கும் மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்ற விதிக்கு உட்பட்டு, கர்ணனின் உயிர் பிரிந்தது என விளக்கமாக சொல்லி தேவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தான் தேவகி மைந்தன் கண்ணன்.