விசா நீட்டிப்புக்கு அரசு மறுப்பு.. இந்தியாவிலிருந்த.. கடைசி சீன நிருபரும் வெளியேற்றம்!

Su.tha Arivalagan
Jun 28, 2023,11:27 AM IST

டெல்லி: இந்தியாவில் தங்கியிருந்த கடைசி சீன நிருபரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரது விசாவை நீட்டிக்க மத்தியஅரசு மறுத்து விட்டதால் அவர் வெளியேறி விட்டார்.


சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா நியூஸ் ஏஜென்சியின் நிருபர் ஆவார் இவர். கடந்த வாரம் இவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்தியா சீனா போரைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து சீன செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 1980ம் ஆண்டு வரை இது நீடித்தது. 80க்குப் பிறகு இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் சீரடைந்த பின்னர் இரு நாடுகளிலும் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


ஆனால் சமீப காலமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளும் மீண்டும் மோசமடைந்து வருகிறது. எல்லைப் பகுதியில் அடிக்கடி இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே உரசல் ஏற்படுவதை சமீப காலமாக கண்டு வருகிறோம். அதேபோல சீனாவின் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் செய்தியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றி வருகின்றன.


இந்த நிலையில் இந்தியாவில் ஜின்குவா செய்தியாளர் மட்டும் தங்கியிருந்தார். அவரது விசாக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தார். ஆனால் மத்திய அரசு  விசா நீட்டிப்புக்கு அனுமதி மறுத்து விட்டது. இதையடுத்து  வேறு வழியில்லாமல் அந்த நிருபர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.


சீனாவிலும் தற்போது ஒரே ஒரு இந்திய நிருபர் மட்டும்தான் இருக்கிறார். பிடிஐ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அந்த நிருபர் பெய்ஜிங்கில் இருக்கிறார்.  இருப்பினும் அவருக்கும் விசா மறுக்கப்பட்டு விரைவில் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. காரணம், சீன நிருபரின் விசா மறுக்கப்பட்டால் இந்திய நிருபர் குறித்தும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.


கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சீன நிருபர்களுக்கு விசா தருவதில் இந்தியா கெடுபிடிகளைக் கையாளுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீன நிருபர்களுக்கு அதிகபட்சம் 3 மாத கால அளவுக்குத்தான் விசா தரப்படுவதாகவும் சீனா கூறியுள்ளது.


ஆனால் இதை மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்கி மறுத்துள்ளார். சீன நிருபர்கள் உள்பட அனைத்து வெளிநாட்டு செய்தியாளர்களும் இந்தியாவில் தங்களது ஊடக கடமைகளை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.