"குற்றம் நிரூபிக்கப்படவில்லை".. நில அபகரிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை!

Su.tha Arivalagan
Jul 06, 2023,11:05 AM IST

சென்னை:  நில அபகரிப்பு வழக்கிலிருந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.


கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, சைதாப்பேட்டையில் ஒரு நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் அவர் வாங்கினார். ஆனால் இந்த நிலம் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக, திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பொன்முடி உள்பட மொத்தம் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.




இந்த வழக்கு எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில் சார்பதிவாளர் புரு பாபு, பொன்முடி மாமியார் சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ சைதை கிட்டு  ஆகியோர் மரணமடைந்தனர்.


இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி. ஜெயவேல் இன்று தீர்ப்பை அறிவித்தார். அதில் சந்தேகத்திற்கிடமின்றி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை 

செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த வழக்கில் மொத்தம் 90 சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது விசாரணைக்குரிய வழக்கே அல்ல என்றும் இதனால் அப்பீல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.