கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ஜூன் மாதம் திறப்பு... அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்!

Aadmika
Apr 15, 2023,02:36 PM IST
சென்னை : சென்னை தாம்பரம் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் முனையம் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, அதற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டுள்ளார்.

சட்டசபையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புக்களை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அப்போது பேசிய அவர், சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் முனையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும். கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

அங்கிருந்து ஒப்பந்த பஸ்கள் இயக்குவதற்கு வசதியாக வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பஸ் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இந்த பஸ் முனையத்தில் 6 ஏக்கரில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 



சுற்றுச்சூழல் துறை அறிவிப்புக்களை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் 50 பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

சென்னை நகருக்குள் உள்ள கோயம்பேட்டில் ஏற்கனவே ஒரு பஸ் முனையம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நகருக்குள் இந்த பஸ் முனையம் இருப்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் கோயம்பேடு பஸ் முனையத்தின் நெரிசலைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

தற்போதைய திமுக ஆட்சியில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளன. கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையம் நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கான திட்டப் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளன. இதனால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரியஅளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை தாம்பரத்திற்கு அப்பால் உள்ள வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் விரிவடையும், சென்னை நகருக்குள் வரும் மக்கள் பெருக்கமும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.