ராகுல் காந்தி, நிதீஷ் குமார் தலைமையில்.. எதிர்க்கட்சிகள் பாட்னாவில் பரபர ஆலோசனை

Su.tha Arivalagan
Jun 23, 2023,10:30 AM IST
பாட்னா:  பீகார் தலைநகர் பாட்னாவில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடி முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

பாஜகவுக்கு எதிராக நாட்டின் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலை அனைவரும் இணைந்து சந்தித்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. அரசியல் விமர்சகர்களும் கூட இதையே  கூறி வருகின்றனர்.



இந்த நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடி இதுதொடர்பாக விவாதிக்க, முக்கிய முடிவுகளை எடுக்க, ஒருங்கிணைந்து செயல்பட இன்று பாட்னாவில் கூடினர். இதில் திமுக, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன. 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் இணைந்து ஆலோசனை நடத்துவது என்பது இதுவே முதல் முறை என்பதால் இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்தான் நிதீஷ் குமார். ஆனால் பாஜக தனது கட்சியையே பதம் பார்க்க ஆரம்பித்ததால் அதிரடியாக அந்தக் கூட்டணியை முறித்து விட்டு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்.

இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இளம் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க ஸ்டாலின், லாலு பிரசாத் யாதவ்,  உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் நிதீஷ் குமாரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர்களைச் சந்திப்பார்கள்.