செந்தில் பாலாஜி கைது..  "பாஜக மீண்டும் அத்துமீறல்".. ஜோதிமணி கடும் பாய்ச்சல்

Su.tha Arivalagan
Jun 14, 2023,12:20 PM IST

கரூர்: தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதற்கு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு கைது செய்திருப்பதற்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. 




கரூரைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜோதிமணியும் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்துள்ளார். கரூர் எம்.பி தேர்தலின்போது ஜோதிமணி வெற்றிக்காக மிகத் தீவிரமாக பாடுபட்டவர் செந்தில் பாலாஜி. அதேபோல  செந்தில் பாலாஜிக்காக எம்எல்ஏ தேர்தலில் தீவிரமாக வாக்கு சேகரித்தவர் ஜோதிமணி என்பது நினைவிருக்கலாம்.


செந்தில் பாலாஜி குறித்து ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில், அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்தப்பட்டு, நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.


தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய, பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைதுசெய்ய வேண்டிய அவசரம் ஏன்?


எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், அமைச்சர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.