ஜோதிமணி நுங்கு சாப்பிட்டது குத்தமாய்யா.. இப்படி வறுத்தெடுக்கறீங்களே

Su.tha Arivalagan
May 20, 2023,10:38 AM IST
சென்னை: கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நுங்கு சாப்பிடுவது போல ஒரு போட்டோ போட்டாலும் போட்டார்.. அதை வைத்து தாறுமாறாக நெகட்டிவ் கமெண்ட்டுகளைக் குவித்து வருகின்றனர் சிலர். ஏன் இந்த அளவுக்கு நெகட்டிவிட்டி என்பது ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

சமூக வலைதளங்கள் எந்த நோக்கத்திற்காக வந்ததோ அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறவில்லை என்று அடித்துக் கூறலாம். எந்த அளவுக்கு இதைத் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நெகட்டிவிட்டிதான் அதிக அளவில் இதன் மூலம் பரவி வருகிறது. 



நடிகர்களாக இருக்கட்டும், அரசியல்வாதிகளாக இருக்கட்டும், சமூக செயற்பாட்டாளர்களாக இருக்கட்டும்.. அவர்கள் என்ன செய்தாலும், அதை எதிர்த்து கமெண்ட் போட ஒரு பெரிய குரூப்பே எப்போதும் காத்திருக்கிறது. ஏதாவது ஒரு போஸ்ட் வந்து விட்டால் போதும், அதை எதிர்த்தும், அதை கேவலமாக விமர்சித்தும், கிண்டலடித்தும், ஆபாசமாக பேசியும் கமெண்ட் போடவும், விமர்சிக்கவும் இவர்கள் எப்போதும் தயாராக உள்ளனர்.

விஜய் குறித்து அஜீத் ரசிகர்களும், அஜீத் குறித்து விஜய் ரசிகர்களும் போடும் சமூக வலைதள சண்டை எந்த அளவுக்கு அசிங்கமாகவும் , ஆபாசமாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோலத்தான் திமுக குறித்து அதிமுகவினரும், அதிமுக குறித்து திமுகவினரும் போடும் சண்டையும் தரமற்றதாக மாறி விட்டது.

இதேபோல திராவிடம் குறித்து பாஜகவும், பாஜக குறித்து பிற கட்சிகளும் போடும் சமூக வலைதள சண்டையும் அத்தனை நாகரீகத்தையும் தூக்கிப் போட்டு மிதிப்பது போலத்தான் இருக்கும். மிக மிக மோசமான ஒரு களம் எது என்றால் அது டிவிட்டரும், பேஸ்புக்கும் என்றாகி விட்டது.  நல்லவேளை இன்ஸ்டாகிராமில் இந்த அளவுக்கு சண்டை மோசமாகவில்லை.

இப்படித்தான் கரூர் எம்.பி. ஜோதிமணி ஒரு டிவீட் போட்டுள்ளார். தனது தொகுதிக்குச் சென்ற அவர் வழியில் வெயில் களைப்பாற அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு விற்கப்பட்ட நுங்கை  வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். இதை வைத்து வந்த கமெண்ட்டுகளைப் பார்த்தால் அடப் பாவமே, ஜோதிமணி நுங்கு சாப்பிட்டது ஒரு குத்தமாய்யா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அநாகரீகமான கருத்துக்கள் குவிந்துள்ளன. 

குரங்கு கையில் நுங்கு என்று ஒருவர் விஷமத்தனமாக கருத்திட்டிருக்கிறார். தனது வீட்டுப் பெண்ணை இவர் இப்படிப் பேசுவாரா என்று தெரியவில்லை. இன்னும் மோசமான கருத்துக்கள்தான் அங்கு குவிந்து வருகின்றன. எதற்கெடுத்தாலும் ஆபாசம்தானா.. இப்படித்தான் குஷ்பு ஏதாவது டிவீட் போட்டாலும் அங்கும் அநாகரீக கருத்துக்கள் குவியும். கஸ்தூரிக்கு சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் அநாகரீகமான கருத்துக்கள்தான் அவருக்குப் பதிலாக வரும். அவரும் விட மாட்டார்.. அதே பாஷையில் அவரும் பேசுவார்.

சமூக வலைதளங்களில் பாசிட்டிவிட்டிக்கு மரியாதை கிடைக்க வேண்டும். ஆபாசத்துக்கும், அநாகரீகத்துக்கும்  கடிவாளம் போட வேண்டும். யார் செய்யப் போகிறார்களோ!