கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 : ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்...தோல்வியை ஏற்றுக் கொண்ட பாஜக

Aadmika
May 13, 2023,03:30 PM IST

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் மே 10 ம் தேதி பதிவான ஓட்டுக்கள் இன்று (மே 13) எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 139 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகி உள்ளது.


கர்நாடகா சட்டசபையில் உள்ள 224 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களே தேர்வு செய்யும் தேர்தல் மே 10 ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற கூட்டணி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களில் பெரும்பாலானவை தொங்கு சட்டசபையே அமையும் என தெரிவித்துள்ளன.




கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கராக குமாரசாமியின் கட்சி இருக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்ட நிலையில், முடிவு எடுத்தாகி விட்டது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்திருந்தது. அதே சமயம் கூட்டணிக்காக தாங்கள் மதசார்பற்ற ஜனதா தளத்திடம் ஆதரவு கேட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் தெரிவித்த தகவலை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் மறுத்துள்ளன.


தேர்தலில் தாங்கள் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளதாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தன. 36 மையங்களில் ஓட்டுக்கள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும், பதற்றமான இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 73.19 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. 


2018 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசைப தேர்தலில் காங்கிரஸ் 38.04 % ஓட்டுக்களையும், பாஜக 36.22 சதவீதம் ஓட்டுக்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 18.36 சதவீதம் ஓட்டுக்களையும் பெற்றன. கர்நாடகாவில் தற்போது பதவிக்காலம் முடிய உள்ள சட்டசபையில் பாஜக.,விற்கு 116 எம்எல்ஏ.,க்களும், காங்கிரசிற்கு 69 எம்எல்ஏ.,க்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒரே ஒரு எம்எல்ஏ.,வும் இரண்டு சுயேட்சைகள், சபாநாயகரும் உள்ளனர். ஆறு இடங்கள் காலியாக உள்ளன. தற்போது தனிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 120 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும். இன்று மாலைக்குள் கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும் என்பதால் அனைவரும் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.


காங்கிரஸ் கட்சி 139 இடங்களுக்கும் அதிகமான இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன. 2018 ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கூடுதலா 59 இடங்களை கைப்பற்ற உள்ளது. அதே சமயம் பாஜக 42 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 17 இடங்களையும் இழந்துள்ளன. 113 இடங்களை பிடித்தால் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில் காங்கிரஸ் 139 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி 34 இடங்களில் காங்கிரசும், 17 இடங்களில் பாஜகவும், 5 இடங்களில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.


தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜக அலுவலகம் வெறிச்சோடிய நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.