கமல்ஹாசனின் மகளாக இருப்பேன்.. அரசியலுக்கு வர மாட்டேன்.. ஷர்மிளா கூல்!

Su.tha Arivalagan
Jul 08, 2023,04:48 PM IST
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மகளாக மட்டுமே இருப்பேன்.. அவருடன் அரசியல் ரீதியாக சேர்ந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஷர்மிளா.

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா, அந்த மாவட்டத்தின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையைப் பெற்றவர். தனியார் நிறுவனத்தில் பயணிகள் பேருந்தை ஓட்டி வந்த அவர் தினசரி செய்திகளில் அடிபட்டார். அவரை வைத்து ஏதாவது செய்தி வந்து கொண்டே இருந்தது.

உள்ளூர் மக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வந்தனர். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும், ஷர்மிளாவைச் சந்தித்தார். அதேபோல திமுக எம்பி கனிமொழியும் சந்தித்துப் பேசினார். அவர் சந்திப்புதான் ஷர்மிளா வாழ்வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.



இந்த சந்திப்பால் ஷர்மிளாவுக்கும், அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்த பெண்மணிக்கும் இடையே பிரச்சினை உருவாகி அது உரிமையாளர் வரை போய், அங்கு ஏதேதோ வாக்குவாதம் நடந்து கடைசியில் வேலையை உதறி விட்டு வந்து விட்டார் ஷர்மிளா.

இந்த நிலையில் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உதவிக்கரம் நீட்டினார். அவருக்கு கார் வாங்கித் தருவதாக உறுதி அளித்து நேரில் வரவழைத்து செக் எல்லாம் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது கார் வாங்கி விட்டார்கள். அந்த காருக்கான சாவியை இன்று கமல்ஹாசன், ஷர்மிளாவிடம் நேரில் அளித்தார். ஷர்மிளா தனது குடும்பத்துடன் வந்து கார் சாவியை வாங்கிக் கொண்டார்.

அதன் பின்னர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த அளித்த பேட்டியின் போது அரசியலில் சேருவீர்களா என்று கேட்கப்பட்டது. அப்போது, வாய்ப்பில்லை. நான் கமல்ஹாசனுடன் அரசியல் ரீதியாக இணைந்திருக்க மாட்டேன். என்னுடைய தந்தையாக, அவருடைய மகளாக நாங்கள் இணைந்திருப்போம் என்று கூறினார் ஷர்மிளா.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல் சாரை கடந்த முறை பார்த்தபோது, வேறு எங்கும் வேலைக்குப் போக வேண்டாம், நான் கார் வாங்கித் தருவதாக கூறினார். முதலில் என்ன வேண்டும்,  பஸ்ஸா, காரா என்று கேட்டார். பெருசா போக வேணாம்னு கார் என்று கூறினார். நானே புக் பண்ணித் தர்றேன்னு சொன்னார். 

முதலில் எர்ட்டிகா தான் புக் பண்ணுவதாக இருந்தேன். பிறகு அது வசதியாக இருக்காது என்பதால் மஹிந்திரா மரஸா புக் செய்தோம். 

கமல்சார் நல்ல எண்ணத்துடன்தான் இந்தக் காரை எனக்குக் கொடுத்துள்ளார். எல்லோருக்கும் என்னால் பண்ண முடியாது. கீழே உள்ள உனக்கு ஹெல்ப் பணணி கை தூக்கி விடுகிறேன் என்று கமல் சார் சொன்னார். இதைப் பற்றி எல்லோரும் நெகட்டிவாகத்தான் பேசுகிறார்கள். ஆனால் நான் பாசிட்டிவாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

அரசு வேலையை எதிர்பார்த்து நான் இந்த வேலையை விட்டு விட்டு வரவில்லை. அப்படி எந்த நோக்கத்திலும் நான் எதையும் செய்யவில்லை. பஸ் டிரைவராக இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அந்த நோக்கம் மட்டுமே எனக்கு இருந்தது என்றார் ஷர்மிளா.