புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல்.. இதுதான்.."காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர்தினம்!

Meenakshi
Mar 26, 2024,03:41 PM IST

சென்னை: புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்ற  மூன்று விதமான காதலை சொல்லும் படம் தான்  "காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் ". இது முற்றிலும் புதுமையான  படமாக உருவாகியுள்ளதாம்.


காதலை விதம் விதமாக எடுப்பதில் தமிழ் சினிமாக்காரர்கள் கில்லாடிகள். சொல்லாத காதல், சொல்ல மறந்த காதல், சொல்ல முடியாத காதல் என தினுசு தினுசாக எடுத்த தமிழ் சினிமாவில் இப்போது இன்னும் ஒரு வித்தியாசமான படம் வந்துள்ளது.




காதலை மூன்று வகைப்படுத்தி இன்றைய இளைஞர் இளைஞிகளுக்காக  வெளிவந்திருக்கும் படம் தான் "காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம் " என்ற படம்.  கலை, உடை, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என எட்டு பொறுப்புகளை ஏற்று இப்படத்தை கெளரி சங்கர் இயக்கியுள்ளார். எம்.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் " காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை காதலர் தினம் " என்ற படத்தை தமது மூன்றாவது படமாக இயக்கியுள்ளார் இயக்குனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, து.மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இப்படத்தில், சரவணன் , அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யாபாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, சன் டிவி அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.




இப்படம் குறித்து இயக்குனர் கெளரி சங்கர் பேசுகையில், இன்றைய காதலை மூன்று  வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.