அரசு பஸ்களில் நாளை முதல் ரூ.2000 நோட்டை வாங்க தடையா?

Aadmika
May 22, 2023,10:12 AM IST
சென்னை : அரசு பஸ்களில் பயணிகளிடம் இருந்து ரூ.2000 நோட்டுக்களை வாங்கக் கூடாது என தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படித்தான் டாஸ்மாக் கடைகள் ரூ. 2000 நோட்டை வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியானது. பின்னர் அப்படி இல்லை, அது தவறான செய்தி என்று மது விலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கினார். இந்த நிலையில்  அரசு பஸ்களில் நாளை முதல் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக் கூடாது என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.



புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இவற்றை எந்த வங்கிக் கிளைகளில் வேண்டுமானாலும் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

ஆனால் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு வங்கிகளும் விளக்கம் அளித்து வருகின்றன. இந்நிலையில் எங்கெல்லாம் ரூ.2000 நோட்டுக்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என குழப்பமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது, மே 23 ம் தேதி முதல் தமிழக அரசு பஸ்களில் டிக்கெட் வழங்கும் போது பயணிகளிடம் இருந்து ரூ.2000 நோட்டுக்களை வாங்கக் கூடாது என தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தப்பட்ட பணிமனைகளின் கன்டெக்டர்களை அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயணிகளிடம் இதமாக எடுத்துக் கூறி ரூ. 2000 நோட்டை வாங்குவதைத் தவிர்க்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அதேசமயம், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவலை இதுவரை போக்குவரத்துத் துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.