செல்ஃபி எடுங்க...ரூ.10,000 பரிசு வெல்லுங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு

Aadmika
Aug 14, 2023,12:26 PM IST
டில்லி : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் குடிமக்களை சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வைப்பதற்காக மத்திய அரசின் சார்பில் செல்ஃபி போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10,000 பரிசும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்திய அரசின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் குடிமக்களையும் கொண்டாடுவதை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று தான் ஆன்லைன் செல்ஃபி போட்டி. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், MyGov உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. ஆகஸ்ட் 15 ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 20 வரை இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.



இதற்காக 12 இடங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இந்த இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று, அழகாக செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். இந்த 12 இடங்களில் எடுக்கப்பட்ட செல்ஃபிகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் செல்ஃபி எடுத்தவர்களில், தலா இடத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செல்ஃபி போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், MyGov இணையதளத்திற்கு சென்று Login to participate என்பதை கிளிக் செய்து, அக்கவுண்டை உருவாக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை அளித்தால் போட்டிக்கான விதிமுறைகள் திரையில் வரும். அவற்றை படித்துப் பார்த்த பிறகு, செல்ஃபி எடுக்கப்பட்ட இடத்தை தேர்வு செய்து, உங்களின் செல்ஃபியை அப்லோடு செய்ய வேண்டும். பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதற்காக இந்த 12 இடங்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த 12 இடங்களும் டில்லியிலேயே உள்ளன.