இம்ரான் கானுக்கு இரண்டு வாரங்களுக்கு ஜாமின்

Aadmika
May 13, 2023,10:27 AM IST
இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வாரங்கள் ஜாமின் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் வழக்கில் சமீபத்தில் இம்ரான் கான், கோர்ட் வாசலிலேயே கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிறகு கலவரமாக மாறியது. பாகிஸ்தானில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. ராணுவ தலைமையகமும் அடித்து நொறுக்கப்பட்டது.



இதற்கிடையில் சிறையில் தன்னை கழிவறையை கூட பயன்படுத்த விடாமல் ஊழல் தடுப்பு பிரிவு படையினர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை கொல்ல சதி நடப்பதாகவும், அதனால் தனக்கு ஜாமின் வழங்கும் படியும் கேட்டு இம்ரான் கான் சார்பில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என கூறியதுடன் அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தன. மேலும் நேற்று காலை 10 மணிக்கு ஐகோர்ட்டில் இம்ரான் கானை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டன.

நேற்று காலை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான் கானுக்கு ஐகோர்ட் இரண்டு வாரங்களுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மே 15 ம் தேதி வரை எந்த வழக்கிலும் அரசு துறை நிர்வாகங்கள் இம்ரான் கானை கைது செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அறக்கட்டளை மீதான வழக்கில் மே 17 வரை கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கானுக்கு 10 நாட்களுக்கு பாதுகாப்பான ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார். இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் அதிரடி அதிர்ச்சி நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

இம்ரான் கான் மீது மூன்று பயங்கரவாதம் தொடர்பான வழக்குகள், கொலை வழக்கு, அவர் நடத்தும் அல் குதிர் அறக்கட்டளை மீது ஊழல், நில மோசடி போன்ற வழக்குகளும் உள்ளன.