பாகிஸ்தானில் பரபரப்பு.. இம்ரான் கானுக்கு கடைசி நேரத்தில் முன்ஜாமீன்.. கைதிலிருந்து தப்பினார்

Aadmika
Feb 21, 2023,10:50 AM IST
இஸ்லாமாபாத் : வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடைசி நேரத்தில் முன்ஜாமீன் பெற்று தப்பி விட்டார்.



முன்னதாக லாகூர் போலீசின் உதவியுடன், இம்ரான் கானை கைது செய்ய எஃப் ஐ ஏ (Federal Investigation Agency)முடிவு செய்திருந்தது. இம்ரானை கைது செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.


சர்வதேச தாய் மொழி தினம் 2023 : தாய்மொழியின் முக்கியத்துவமும், வரலாறும்!


கைது நடவடிக்கையை துவக்குவதற்கான இறுதிக்கட்ட அறிக்கை எஃப்ஐஏ அமைப்பில் இயக்குனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், முன்ஜாமீன் பெற்று விட்டார் இம்ரான் கான்.  ஏற்கனவே சட்ட விரோத நிதி முறைகேடு விவகாரமாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷனுக்கு எதிராக பாகிஸ்தான் தெஷ்ரீக் இ இன்சஃப் கட்சி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை பிப்ரவரி 02 ம் தேதி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 

அதே சமயம் இம்ரான் கான் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக எஃப் ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல்அறிக்கையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனை விதிகளை மீறியதாகவும், தனியார் வங்கி கணக்கு இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாகூர் ஹைகோர்ட்டில் சரணடைய நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை இம்ரான் கானுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இம்ரான் கான் முன்ஜாமின் தாக்கல் செய்தால் அதை விசாரிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர். ஆனால் இம்ரான் கான் சரணடையாததால், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இம்ரான் கான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக இம்ரான் கானை நேரில் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை. மாறாக தனது வக்கீல்கள் மூலம் விளக்கம் கொடுத்திருந்தார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், இம்ரான் கானுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இதையடுத்தே இம்ரான் கான் அவசரம் அவசரமாக கோர்ட்டுக்கு வந்தார். அதன் பின்னர் இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மார்ச் 3ம் தேதி வரை இம்ரான் கானுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 3ம் தேதி வரை அவர் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.