கடைசி ஓவரில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி...ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Aadmika
Apr 13, 2023,09:50 AM IST
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில், 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இது கேப்டன் தோனி தலைமை ஏற்று விளையாடிய 200 வது போட்டி என்பதால் போட்டி துவங்குவதற்கு முன்பே சென்னை அணி சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.



முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா, டுவென்டி- 20 போட்டிகளில் தனது 200 வது விக்கெட்டை வீழ்த்தினார். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் பறி போகின.

கடைசி ஓவரில் 6 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தோனி சிக்சர்களை விளாசினார். இருந்தாலும் கடைசி ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தோனி தலைமை ஏற்கும் 200 வது போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது.