களை கட்டும் உலகக் கோப்பை கிரிக்கெட்.. சென்னையில்.. லட்டு போல 5 போட்டிகள்..!

Su.tha Arivalagan
Jun 27, 2023,01:11 PM IST
 சென்னை:  சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 5 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் முதல் போட்டியே சென்னையில்தான் நடைபெறப் போகிறது என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். முதல் போட்டியிலேயே இந்தியாவை சூப்பராக உற்சாகப்படுத்தி பூஸ்ட் கொடுத்து பட்டையைக் கிளப்பும் வெற்றிக்கு உதவியாக சென்னை ரசிகர்களின் விசில் சத்தம் ஆரவாரமாக காத்திருக்கிறது.

மொத்தம் 10 அணிகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.  ரவுன்ட் ராபின் முறையில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடனும் தலா ஒரு முறை மோதும். அதன் பின்னர் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்... அதாவது அரை இறுதிக்குத் தகுதி பெறும்.

முதல் அரை இறுதிப் போட்டியானது நவம்பர் 15ம் தேதி மும்பையில் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டி நவம்பர் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும்.

சென்னையில் 5 போட்டிகள்

சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியானது அக்டோபர் 8ம் தேதி நடைபெறும். அதில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மைதானத்தில் நடைபெறும் பிற போட்டிகள் குறித்த விவரம்:

அக்டோபர் 14 : நியூசிலாந்து - வங்கதேசம் 
அக்டோபர் 18 : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 23 : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 27 : பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா