இந்துஜா குழும தலைவர் ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா மரணம்!

Su.tha Arivalagan
May 18, 2023,12:40 PM IST
டெல்லி: இந்துஜா குழுமத்தின் தலைவரும், இந்துஜா சகோதரர்களில் மூத்தவருமான ஸ்ரீசந்த் பர்மானந்த் இந்துஜா தனது 87வது வயதில் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

லண்டனில் வசித்து வந்தார் இந்துஜா. உடல்நலக் குறைவால் அவர் காலமானார். ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர் பர்மானந்த் இந்துஜாவும், அவரது சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ் இந்துஜா ஆகியோர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஏபி போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 64கோடி கையூட்டு பெற்றதாக இந்துஜா சகோதரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் பின்னர் இந்துஜா சகோதரர்கள் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டனர்.



இங்கிலாந்து குடியுரிமை பெற்று லண்டனிலேயே செட்டிலாகி விட்டார் பர்மானந்த் இந்துஜா. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்து வந்த அவர் நேற்று காலமானார். ஒரு காலத்தில் இந்துஜா சகோதரர்கள்தான் இங்கிலாந்திலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் லேலன்ட், இந்தஸ்இன்ட் பேங்க், இந்துஜா பேங்க், கல்ப் ஆயில் நிறுவனம், குவாக்கர் ஹட்டன்,இந்துஜா ஹெல்த்கேர் லிமிட்டெட் ஆகியவை இந்துஜா குழுமத்தின் சில முக்கிய நிறுவனங்கள் ஆகும்.