வட மாநிலங்களை உலுக்கி எடுக்கும் பெரும் மழை.. ஹிமாச்சல் கடும் பாதிப்பு

Su.tha Arivalagan
Jul 10, 2023,09:48 AM IST

டெல்லி: வட மாநிலங்களில் தொடர்ந்து பெரும் மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.


வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து வருகிறது. 20 பேர் வரை இதுவரை உயிரிழ்ந்துள்ளனர்.




அதிகபட்சமாக ஹிமாச்சல் பிரதேசம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.  தொடர் பெரு மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. திடீர் வெள்ளத்தால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன, மண்ணில் புதைந்துள்ளன. கடைகள், வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.


சம்பா, கின்னார், மனாலி, குல்லு ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரவி, பியாஸ்,  சட்லஜ், செனாப், ஸ்வான் ஆகிய ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் ஓடுகிறது.


ஹிமாச்சல் பிரதேசம் மட்டுமல்லாமல் அருகாமை மாநிலமான உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 


டெல்லியில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவு பல்வேறு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. யமுனா ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வட மேற்கு இந்தியாவில் மழை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.