கேரளாவில் கனமழை...வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

Aadmika
Jul 05, 2023,11:57 AM IST
 கொச்சி : கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தின் வால்பாறை, நீலகிரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவின் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில்  மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஊர் மக்கள் கயிறு கட்டி தோட்ட தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர்.



கேரளாவில் எர்ணாகுளம், கன்னூர், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பேர்மேடு பகுதியில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மணிமாலா ஆற்றில் நீரின் அளவு அபாய அளவை தாண்டி ஓடுவதால் பத்தனம்திட்டா பகுதியில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கன்னூர் மத்திய சிறையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.