இமாச்சலில் கொட்டி தீர்க்கும் கனமழை... நிலச்சரிவு... சாலைகள் மூடல்

Aadmika
Jun 26, 2023,10:10 AM IST
மாண்டி : இமாச்சல பிரதேசத்தில் திடீரென தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாண்டி - குலு இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து வருவதால் வானிலை மோசமாக இருந்து வருகிறது. கோட்டி நலா அருகே வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மாண்டி - குலு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.



மாண்டி - ஜோஹிந்தர் நகர் தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுப் பயணிகள், பொதுமக்கள் யாரும் இந்த பாதைகளில் பயணம் செய்ய வேண்டும். ஏற்கனவே பயணம் செய்தவர்களும் யாரும் சாலைகளில் வாகனங்களில் காத்திருக்க வேண்டாம். பாறைகள் உருண்டு வருவது, மண்சரிவு ஏற்படுவது போன்றவை நிகழ்வதால் இது மிகவும் ஆபத்தானது.

நிலைமையை பொறுத்து தேசிய நெடுஞ்சாலை நாளை திறக்கப்படலாம். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 5 நாட்களுக்கு இமாச்சலில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாண்டி, கங்கரா, சோலன் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வெளிச்சமே காணப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.