செந்தில் பாலாஜி உடல் (உயிர்) நிலை எப்படி உள்ளது.. என்ன இப்படிக் கேட்டுட்டாரு எச். ராஜா!

Su.tha Arivalagan
Jul 10, 2023,09:23 AM IST

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா போட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அரசு ஓமந்தூராரர் மருத்துவமனையில் அவரது இதய நாளங்களில் 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஹைகோர்ட் உத்தரவுப்படி அவரை காவேரி மருத்துவமனைக்கு இடம் மாற்றினர்.



காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில்தான் இருக்கிறார். அவர் சாப்பாடு சாப்பிடுவதாகவும், இன்ன பிற அப்டேட்டுக்களையும் அவ்வப்போது காவேரி மருத்துவமனை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் மூத்த பாஜக தலைவர் எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், செந்தில் பாலாஜி உடல் (உயிர்) நிலை எப்படி உள்ளது  என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக open heart surgery செய்து கொண்டவர்களே ஒரு வாரத்தில் நடமாட துவங்குகின்றனர். ஆனால் 35 நாட்களுக்கு பின்னரும் முதல்வரும் தமிழக அரசும் நாடகமாடுகின்றனர். இதை மறைக்கவே ஜனாதிபதிக்கு கடித நாடகம் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் எச். ராஜா.

எச். ராஜாவின் இந்த டிவீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 19 பக்க கடிதம் எழுதியிருந்தார். அதில், ஆளுநர் ஆர்.என். ரவி மீது அடுக்கடுக்காக பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார். உயர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டியவர் ஆளுநர் ரவி என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் தொடர்பாக பாஜகத லைவர்கள் அடுத்தடுத்து கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும், பதிலும் அளிக்கப்படவில்லை.