ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை:  நிறுத்தி வைக்க குஜராத் ஹைகோர்ட் மறுப்பு

Su.tha Arivalagan
Jul 07, 2023,04:08 PM IST
அகமதாபாத்: காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட் விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கர்நாடகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில், அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற துணைப் பெயர் இருப்பது ஏன் என்று நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் குறித்துப் பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி என்பவர் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார்.



ராகுல் காந்தி மோடி சமூகத்தை அவமதித்து விட்டார். எனவே அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட், ராகுல் காந்திக்கு அதிகபட்சமான 2 ஆண்டு தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் வகித்து வரும் பதவி பறி போய் விடும் என்ற அடிப்படையில், ராகுல் காந்தியின் எம்.பி உடனடியாக பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த குஜராத் ஹைகோர்ட் இன்று சூரத் கோர்ட் விதித்த தண்டனயை நிறுத்தி வைக்க மறுத்து  உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. அவரது தரப்பும் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று தெரிகிறது. அங்கு இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு.