வாட்டி வதைக்கும் குளிர், பனிமூட்டம்.. சென்னையை பொறாமை பட வைக்கும் டில்லி

Aadmika
May 04, 2023,03:28 PM IST
டில்லி : சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில் டில்லியில் மட்டும் காலை வேளையில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. பனிமூட்டமும் காணப்படுகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் வெயிலே தாங்க முடியாத நிலையில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரமும் இன்று துவங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




மழையை பார்த்து ரொம்ப சந்தோஷ பட்டுக்காதீங்க என்பது போல், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழையும் அதிகமாக இருக்கும், வெயிலின் தாக்கமும் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இங்கு வெயிலின் கொடுமையால் மக்கள் கலங்கி போய் இருக்கும் நிலையில் டில்லியில் மே கடும் குளிர் நிலவுகிறது.

வழக்கமாக மே மாதத்தில் டில்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.5 டிகிரி செல்சியசாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 15.8 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை சரிந்துள்ளது. 1901 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக டில்லி வெப்பநிலை கடுமையாக மே மாதத்தில் குறைந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக அடிக்கடி கருமேங்கள் சூழ்வதும், மழை பெய்வதும், குளிர் வாட்டுவதுமாக டில்லியில் காலநிலை மாறி வருகிறது. 

பனிமூட்டத்துடன் காணப்படும் டில்லி நகர வீதிகளின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு குளிரை மே மாதத்தில் அனுபவித்ததில்லை என பலரும் கூறி வருகின்றனர். காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30 மிமி மழை பதிவாகி உள்ளது.