"பயத்தைக் காட்டிட்டாண்டா பரமா".. அதுக்குள்ள 15 வருஷமாச்சா.. நெகிழ்ந்து போன சசிக்குமார்!

Su.tha Arivalagan
Jul 04, 2023,11:15 AM IST
சென்னை: தமிழ் திரைப்பட ரசிகர்களை உறைய வைத்த படங்களில் சுப்பிரமணியபுரம் படத்திற்கும் தனி இடம் உண்டு. அந்தப் படம் வந்து தற்போது 15 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் சுப்பிரமணியபுரம் படத்திற்கு தனி ஸ்பெஷல் உண்டு. ஒரு ரவுடிக் கூட்டத்தின் கதையை வித்தியாசமாக கொடுத்த படம்தான் சுப்பிரமணியபுரம். பல காரணங்களுக்காக இந்தப் படம் வெகுவாக பேசப்பட்டது, பாராட்டப்பட்டது, சிலாகிக்கப்பட்டது.



சாதாரண ரவுடிக்  கதைதான். ஆனால் பாத்திரப் படைப்புகள், அதில் நடித்த கலைஞர்கள், கதைக்களம், கிளைமேக்ஸ் என எல்லாமே அட்டகாசமாக அமைக்கப்பட்டிருந்தன. அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். படத்தில் நடித்த ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, சசிக்குமார், கஞ்சா கருப்பு, குட்டி குட்டி கேரக்டர்களில் வந்தவர்கள் என எல்லோருமே பேசப்பட்டனர், பாராட்டப்பட்டனர்.

சமுத்திரக்கனியை ஒரு நடிகராக  புடம் போட்ட படம் இதுதான். இந்தப் படத்திலிருந்துதான் அவரது கெரியர் கிராப் உயரத் தொடங்கியது. இன்று வேற லெவல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. அதேபோல சசிக்குமாரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. பாடல்கள் பேசப்பட்டது.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

வேலை வெட்டி என்று எதுவும் உருப்படியாக இல்லாத இளைஞர் கூட்டம் தவறானவர்கள் கையில் சிக்கினால் எப்படி சிதறுண்டு சிதிலமடைந்து போகும் என்ற கதையை நாம் ஏற்கனவே கமல்ஹாசனின் சத்யா படத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தின் ரவுடிக் கூட்டம் சிதறிப் போக ஒரு காதலும், அந்தக் காதலுக்குப் பின்னால் காத்திருந்த சூழ்ச்சியும் என்ற வித்தியாசமான கோணத்தில் அமைந்த இயக்கமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படம் வந்து தற்போது 15 வருடங்களாகியுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் சசிக்குமார், அதுக்குள்ள 15 வருஷம் ஓடிருச்சா என்று ஆச்சரியப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நேற்றுதான் நடந்தது போல இருக்கு. சுப்ரமணியபுரம் வந்து 15 வருஷமாச்சு. நினைவுகள் அப்படியே இன்னும் பிரஷ்ஷா இருக்கு. மக்கள் எல்லாம் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை, கொண்டாடித் தீர்த்தார்கள். இந்த நல்ல நேரத்தில் ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் - அடுத்த புதிய படத்தை விரைவில் இயக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் சசிக்குமார்.

ரசிகர்களும், திரையுலகப் பிரமுகர்களும் கூட 15 வயது சுப்பிரமணியபுரத்தைக் கொண்டாடி வருகின்றனர்.