ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணம்

Aadmika
Jan 04, 2023,03:02 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான திருமகன் ஈ.வெ.ரா., மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு வயது 46. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈவெரா.,வின் கொள்ளு பேரனும் ஆவார். 

திருமகன் ஈவெரா, முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனவர் ஆவார்.  ஈரோடு(கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.




இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள கேஎம்சிஹச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

திருமகன் ஈவெராவின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் எம்எல்ஏ திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்