நான் மோடியின் ரசிகன்.. இந்தியாவுக்கு வருகிறேன்.. டெஸ்லாவும் வருகிறது.. எலான் மஸ்க் அதிரடி!

Su.tha Arivalagan
Jun 21, 2023,09:38 AM IST
நியூயார்க்: நான் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன். மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அடுத்த ஆண்டு நான் இந்தியா வருகிறேன். டெஸ்லா ஆலையும் இந்தியாவில் விரைவில் அமையவுள்ளது என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க்கில் அவர் இந்திய அமெரிக்க தொழிலதிபர்களைச் சந்திக்கிறார். அத்தோடு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கையும் பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்புதான் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.


டெஸ்லா நிறுவனத்தின் ஆலையை

இந்தியாவில் அமைப்பது தொடர்பாக சில ஆண்டுகளாகவே பேச்சு அடிபடுகிறது. ஆனால் இந்தியாவில் பல்வேறு  கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை டெஸ்லா ஏற்கவில்லை. இதனால் இந்தியாவை தனது பரிசீலனைப் பட்டியலிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டார் மஸ்க். இதனால் டெஸ்லா கார்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு இன்னும் கை கூடாமல் இருக்கிறது.

ஆனால் சமீப காலமாக இந்தியா மீது தனது கவனத்தை மீண்டும் திருப்ப ஆரம்பித்துள்ளார் மஸ்க். டெஸ்லா ஆலையும் இங்கு வரும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்த நிலையில் நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்தார் மஸ்க்.

சந்திப்புக்குப் பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை சிறப்பாக தலைமை தாங்கி வருகிறார். உலக அளவில் மிகப் பெரிய நாடு ஒன்று சிறப்பாக செயல்படுகிறது என்றால் அது இந்தியாதான். இந்தியாவின்  எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நான் மோடியின் ரசிகன். அவருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது.   அவரை எனக்கு நிறையப் பிடித்திருக்கிறது என்றார் மஸ்க்.

இந்தியாவுக்குச் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக செல்வேன். திட்டம் உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா செல்வேன் என்று பதிலலித்தார் மஸ்க். அதேபோல இந்தியாவில் டெஸ்லா ஆலை வெகு சீக்கிரம் உதயமாகும் என்ற தகவலையும் தெரிவித்தார் மஸ்க். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் எந்த பகுதியில் ஆலை அமையவுள்ளது என்பதை இறுதி செய்து விடுவோம் என்றும் கூறினார் மஸ்க்.

மோடி - மஸ்க் சந்திப்பது இது முதல் முறையல்ல. 2015ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா நிறுவன தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி விஜயம் செய்தபோது முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேசினர் என்பது நினைவிருக்கலாம்.