"ஹலோ யாருப்பா அது.. திறந்து விடுங்க".. சவப்பெட்டிக்குளிலிருந்து கதறிய பாட்டி.. பரிதாப மரணம்!

Su.tha Arivalagan
Jun 19, 2023,12:49 PM IST
க்விட்டோ, ஈக்வடார்: ஈக்வடார் நாட்டில் மரணமடைந்து விட்டார் என்று கருதி சவப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஒரு பாட்டி பெட்டியின் கதவை மடமடவென்று தட்டினார். பின்னர் அதிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 7 நாட்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக மரணத்தைத் தழுவினார்.

சவப்பெட்டிக்குள் போய் செத்துப் பிழைத்த அந்தப் பாட்டியின் பெயர் பெல்லா மோன்டயா. 76 வயதாகும் அந்தப் பாட்டி ஜூன் 9ம் தேதி "மரணமடைந்தார்".  இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சவப்பெட்டி ஆர்டர் கொடுக்கப்பட்டு அது வந்து சேர்ந்தது. பாட்டியை சவப் பெட்டிக்குள் வைத்து அஞ்சலி நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன.



கிட்டத்தட்ட 5 மணி நேரம் பாட்டி பெட்டிக்குள் இருந்த நிலையில் திடீரென கதவு தட்டும் சத்தம் போல பெட்டியைத் தட்டும் சத்தம் கேட்டது. எல்லோரும் திகைத்துப் போய் வேகமாக பெட்டியை மூடிய ஆணியை நீக்கி விட்டுத் திறந்து பார்த்தபோது பாட்டிதான் பெட்டிக் கதவை தட்டியது தெரிய வந்து அதிர்ந்தனர். அதாவது பாட்டி உயிருடன்தான் இருந்துள்ளார்.

மூச்சுத் திணறிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பாட்டியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குகடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பாட்டி நிஜமாகவே உயிரிழந்து விட்டார்.

பாட்டி சவப்பெட்டிக்குள் எப்படி உயிருடன் இருந்தார் என்று மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது, பாட்டிக்கு catalepsy என்ற வலிப்பு வந்துள��ளது.இந்த வலிப்பு வந்தவர்கள் சுய நினைவு இழந்து விடுவார்கள். உடம்பு இறுகிப் போய் விடும். கிட்டத்தட்ட பிரேதம் போலவே இருப்பார்கள். இதனால்தான் பாட்டி இறந்து விட்டதாக கூறி சவப்பெட்டிக்குள் வைத்துள்ளனர்.

பாட்டி இறந்து விட்டதாக கூறி சவப்பெட்டிக்குள் வைத்து அவர் உயிர் பிழைத்து பின்னர் மீண்டும் இறந்த சம்பவம் ஈகுவடாரில் பரபரப்பையும்,சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.