ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருத்தர் போதும் ஓட்டு எங்களுக்கு தான்... காங்.ஐ கலாய்த்த அண்ணாமலை

Aadmika
Feb 09, 2023,03:35 PM IST
சென்னை : கடந்த தேர்தலில் ராகுல் காந்தி எங்களை வெற்றி பெற வைத்ததை போது,  இந்த முறை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருவர் போதும். அவர் பேசினாலே எங்களுக்கு ஓட்டு வந்து விடும் என காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



சென்னையில் இன்று மரம் நடுவிழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அண்ணாமலை, கடந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டவர் ராகுல் காந்தி. அது போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் பிரச்சார பீரங்கி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான். அவர் மட்டும் பேச ஆரம்பித்தால் போதும். தானாக எங்களுக்கு ஓட்டு வந்துவிடும். தமிழகத்தில் ஆளுங்கட்சி பயத்தில் உள்ளது.

அதனால் தான் திமுக., ஒட்டுமொத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் ஈரோடு தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி உள்ளது. இல்லா விட்டால் இடைத்தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கு எதற்காக இத்தனை அமைச்சர்களை நியமித்துள்ளது. தமிழகம் - இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்றார். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டது. பெறப்பட்ட வேட்புமனுக்கள் சரி பார்க்கப்பட்டு, ஈரோடு இடைத்தேர்தலில் 82 பேர் இறுதி வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.