"கர்ப்பிணிகள் சுந்தரகாண்டம் படிச்சா.. குழந்தை நல்லா பொறக்கும்".. தமிழிசை செளந்தரராஜன்!

Su.tha Arivalagan
Jun 13, 2023,10:56 AM IST
ஹைதராபாத்: கர்ப்பிணிப் பெண்கள் ராமாயாணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தைப் படித்தால் குழந்தைகள் புத்திசாலித்தனம், வீரம், ஆரோகக்கியத்துடன் பிறக்கும் என்று தெலங்கானா மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சுந்தரகாண்டம் படித்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தைகள் சிறப்பாக இருப்பார்கள் என்றும் பேசியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன். ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் அவர்.



ராஷ்டிரிய சேவிகா சமிதி (இது ஆர்எஸ்எஸ் போலவே பெண்களுக்காக இருக்கும் அமைப்பு) அமைப்பின் துணைப் பிரிவுதான் சம்வர்த்தினி நியாஸ். இந்த அமைப்பு கர்பா சன்ஸ்கார் என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. அதை தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு அறிவியல் பூர்வ பரிந்துரைகளுடன், பாரம்பரிய முறைகள் குறித்த விழிப்புணர்வையும் இந்த ஆர்எஸ்எஸ் டாக்டர்கள் ஊட்டுவார்களாம். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நமது பாரம்பரியத்தில் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளை கற்றுக் கொடுப்பார்களாம். இதன் மூலம் "தேசபக்தி" கொண்ட குழந்தைகள் பிறக்குமாம்!

அதன்படி கர்ப்பிணிகளுக்கு பகவத் கீதை, ராமாயாணம் படிப்பது, சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்வது, யோகா கற்றுத் தருவது ஆகியவை சொல்லித் தரப்படுமாம். கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலை முதல் டெலிவரி நிலைவரை இந்த போதனை தொடருமாம். அதன் பின்னர் குழந்தைக்கு 2 வயது ஆகும் வரையும் இது கற்றுத் தரப்படுமாம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழிசை பேசும்போது, இது நிச்சயம் பெரிய பலன்களைக் கொடுக்கும்.  கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களைப் படிப்பார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் கம்ப ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தைப் படிக்க வேண்டும்.  அதைப் படிப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும். வீரத்துடனும், விவேகத்துடனும், அறிவுடனும், பக்தியுடனும், சுய நலம் இல்லாத குணத்துடனும் குழந்தைகள் பிறக்கும் என்றார் தமிழிசை.

டாக்டர் தமிழிசையின் பேச்சு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு மகப்பேறு மருத்துவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.