"ஹூ" நேத்துதான் சொல்லுச்சு.. இதோ கிளம்பிருச்சு புதிய வைரஸ்!

Aadmika
May 26, 2023,09:23 AM IST
நியூயார்க் : கொரோனாவைரஸைத் தொடர்ந்து அடுத்த தாக்குதலுக்கு உலகம் தயாராகிக் கொள்ள வேண்டும் என நேற்று தான் உலக சுகாதார மையத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்குள் "டிசிஸ் எக்ஸ்" என்ற பெயரில் புதிய வைரஸ் பரவ உள்ளதாக உலக சுகாதார மையம் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2019 ம் ஆண்டு துவங்கி கோவிட் 19 ஆல் உலகம் மிகப் பெரிய அழிவை, பாதிப்பை சந்தித்து வந்தது. ஒருவழியாக விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து வந்ததால் தற்போது கொரோனா கட்டுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை சமீபத்தில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் உலகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 



இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார மைய கூட்டத்தில் பேசிய அதன் தலைவர், உருமாறிய புதிய வைரஸ் ஒன்று வர உள்ளது. அதை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என கூறி இருந்தார். அவர் தெரிவித்த சில நாட்களிலேயே உலக சுகாதார மையத்தில் இணையதளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் டிசிஸ் எக்ஸ் என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

அடுத்த பேரழிவை உருவாக்கக் கூடிய நோய்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எபோலா, சார்ஸ், ஜிகா ஆகியவற்றுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டிசிஸ் எக்ஸ் என்ற பெயர் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது எப்படி வருகிறது என்றே தெரியாத, மனிதர்களை தாக்கக் கூடிய வைரஸ் ஒன்று உலக அளவில் பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடிய அபாய நிலை உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரசா, பாக்டீரியாவா, பூஞ்சையா எந்த சிகிச்சை அளிப்பது என தெரியாத புதிய வகையை சேர்ந்ததாக உள்ளது என உலக சுகாதார மையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற வார்த்தைகளை உலக சுகாதார மையம் 2018 ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது. முன்பு இதேபோல தெரிவித்து அடுத்த ஓராண்டிலேயே கொரோனா முதல் அலை உலகை தாக்க துவங்கியது.

இதனால் உலக விஞ்ஞானிகள் பலரும் அடுத்த டிசிஸ் எக்ஸ் என்பது எபோலா, கொரோனா போல் மனித உயிர்களை தாக்கக் கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதே சமயம் இந்த புதிய நோய் மனிதர்களால் உருவாக்கப்படலாம். இதை நாம் புறந்தள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.