ராங் சைடில் வந்த பள்ளிப் பேருந்து.. வேகமாக வந்த கார் மோதி.. 6 பேர் பலி

Su.tha Arivalagan
Jul 11, 2023,09:28 AM IST
டெல்லி: டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலையில் தவறான பாதையில் வந்த ஒரு பள்ளிக்கூடப் பேருந்து மீது கார், நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரமான சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.

டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வேயில் இன்று காலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதி வேக எக்ஸ்பிரஸ் வே இது என்பதால் வாகனங்கள் பெரும்பாலும் நல்லவேகத்தில்தான் செல்லும். அந்த சமயத்தில் பள்ளிக்கூட பேருந்து ஒன்று தவறான பாதையில் வந்து கொண்டிருந்தது. இதை எதிர்பார்க்காத, அதே திசையில் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி, பஸ் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.



கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பு பகுதி அப்படியே நொறுங்கிப் போனது. பஸ்ஸின் முன்பகுதியும் பெரும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் சரியான திசையில் வந்தபோதும், பஸ் தவறான முறையில் வந்ததால்தான் இந்த கோர விபத்து நடந்து விட்டது.

காருக்குள் சிக்கியிருந்த உடல்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் வெளியே எடுக்க முடிந்தது. காலையில் நடந்த இந்த சம்பவம் டெல்லியை உலுக்கி விட்டது.