சாட்டர்டே ஜாலிக்கு.. "தேஜாவு" பெஸ்ட் சாய்ஸ்.. பாருங்க என்ஜாய் பண்ணுங்க!

Su.tha Arivalagan
Jun 17, 2023,10:14 AM IST
- சகாயா

என்ன மக்களே.. சவுக்கியமா.. பிரேக்ஃபாஸ்ட் ஆச்சா..  பிறகென்ன விசேஷம்.. ஒரு கதை சொல்றேன் கேக்கறீங்களா.. வெள்ளிக்கிழமை வந்தாலே அந்த வீக் என்ட் ஜாலி வந்து குடியேறும் பார்த்தீங்களா.. அப்படித்தான் எனக்கும் நேற்று ஒரு ஹேப்பி மோடில் மைன்ட் செட் ஆனது.. பணிச் சுமையெல்லாம் போதும்டா சாமி.. ஜஸ்ட் இளைப்பாறுவோம் என்று யோசித்தபோது, அமேசான் பிரைமில் "தேஜாவு" திரைப்படத்தை  பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

2022ம் ஆண்டு வெளியான படம்தான் தேஜாவு.  இருந்தாலும் இப்பப் பார்த்தாலும் விறுவிறுப்புக்குக் குறைச்சலே இல்லை. சும்மா சொல்லக் கூடாது.. செம கதை.. ஜாலியான படம். பொழுது போக்கு பெஸ்ட் சாய்ஸ்.



வழக்கமான போலீஸ் ஒரு கொலையை துப்பறியும் கதை போல அல்லாமல் வேறு தொனியில் படம் தொடங்குகிறது. சுப்பிரமணியன் என்ற ஒரு எழுத்தாளன் எழுதும் கதைகள் எல்லாம் நிஜமாகிறது. அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் கொலை சம்பவமாய் அப்படியே நடக்கிறது.

த்ரில்லர் போலீஸ் ஸ்டேஷன் என்ற பாணியில் படம் ஆரம்பிக்க முதல் பகுதியில் கொஞ்சமாக காமெடியாகவும் நகர்கிறது. அப்படியே படம் சூடு பிடித்து காமெடியின் சுவடே இல்லாமல் விறுவிறுப்பான களமாக மாறி ஓடுகிறது.

போலீஸ் மகள் கடத்தல் , அண்டர் கவர் ஆபரேஷன் , போலீஸ் என்கொவுண்டர் , பெண்களை பாலியல் பலாத்காரம் , அதிகாரமும் பண பலமும் பிடித்த முதலைகளை ஒரு இளைஞன் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை .

இரண்டு கதைகள் அதை இணைக்கும் ஒரு கோடு. அதை நோக்கி கதையை நகர்த்தும் திருப்பங்கள் என ஒவ்வொரு காட்சியும் அப்படியே நம்மை இருக்கை நுனியில் அமர்த்தி விடுகிறது . எழுத்தாளராக வரும் நாயகன் அச்யுத் குமாரின் நடிப்பு பிரமாதம். எழுத்தாளர்,  கூடவே காவலுக்கு இருக்கும் கான்ஸ்டபிள், அவர் எழுதும் அறை, சில காகிதங்கள் எனும் எந்த சிறு இடம் படத்தில் சில மாயாஜாலங்கள் நிகழ்த்துகிறது .

பாடல்கள் கிடையாது . வெளிநாடு ஜில் ஜில் காட்சிகள் கிடையாது. காதல் காட்சிகள்
எங்கோ ஓன்று இறுதியில் இருக்கலாம். இதை எல்லாம் தாண்டி வழக்கின் தேடல் நம்மை சுவாரஸ்யமாக உட்கார வைத்ததற்கே அறிமுக இயக்குனருக்கு சபாஷ் போடலாம். ஒரு ஆங்கில படத்தின் சாயல் இருந்தாலும் கூட இது ஒரு அழகான பட்ஜெட் தமிழ் த்ரில்லர்.

அரசு அதிகாரியாக மதுபாலா. சின்ன சின்ன ஆசை ரோஜா படத்தில் புருஷனை பக்தியோடு பார்க்கும் வெகுளித்தனமான மதுபாலா என்னும் அழகு பதுமைதான் இந்த படத்தில் உயர் அதிகாரியாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கடத்தப்பட்ட பெண்ணின் அம்மாவாக அந்த எழுத்தாளரிடம் என் பெண்ணை கொடுத்துவிடு என கெஞ்சும் காட்சியில் அம்மாவாக உடைந்து அழாமல் அந்த கேரக்டரை டைரக்டர் அப்படி ஓங்கி பிடித்திருக்கிறார் .

அதிகாரி விக்ரம் குமாராக வந்து அதிரடி காட்டி இருக்கிறார் கதாநாயகன் அருள்நிதி. விக்ரம் குமாராக தோற்றத்திலும் நடிப்பிலும் பொருத்தமாக வருகிறார் அருள்நிதி.

ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பதற்றத்துடன் வைக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. பி.ஜி.முத்தையாவின் ஓளிப்பதிவு கோணங்கள் தேர்ச்சியுடன் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான மர்மங்க��ை ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கிறது.

இந்த படத்தை நீங்க மிஸ் பண்ணிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.. ஒரு வேளை மிஸ் பண்ணிருந்தா உடனே போய் பாருங்க.. சாட்டர்டேவை என்ஜாய் பண்ணுங்க.