"தீபாவளி புக்கிங்"... என்னண்ணே சொல்றீங்க.. பாண்டியன்ல டிக்கெட் தீர்ந்து போச்சா!

Su.tha Arivalagan
Jul 12, 2023,02:30 PM IST
சென்னை: தீபாவளியையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால் வழக்கம் போல இப்போதும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. பெரும்பாலானவர்கள் ஆன்லைன் புக்கிங்கில் டிக்கெட்களை முன்பதிவு செய்து விட்டனர்.

மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி செல்லும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகள் விற்று விட்டன. இதே நிலைதான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும்.




பகல் நேரத்தில் செல்லக் கூடிய வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் 2ம் வகுப்பு டிக்கெட்கள் கொஞ்சம் காலியாக உள்ளன. முக்கிய ரயில்களில் டிக்கெட்கள் தீர்ந்து விட்டதால் அடுத்து சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் அதிகம் இருந்தபோதிலும் மக்கள் புக் செய்து வைத்துள்ளனர். கடைசி நேரத்தில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்.

நவம்பர் 12ம் தேதிதான் தீபாவளி வருகிறது. ஆனால் இப்போதே புக்கிங்கில் மக்கள் மும்முரமாகி விட்டனர். அதிலும் சில நிமிடங்களிலேயே முக்கிய ரயில்களில் டிக்கெட்கள் தீர்ந்து போனது குறிப்பிடத்தக்கது.